அன்பு நண்பர்களே புதிய முயற்சி இது. தங்களின் மேலான கருத்துக்களை Guest Book ல் பதிவு செய்வீர். நன்றி

Sunday, March 27, 2011

                    நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

அந்த முதியவருக்கு இருமல். கடுமையானது அல்ல. ஆயினும் நீண்ட நாட்களாத் தொல்லை கொடுக்கின்றது. சளி கிடையாது. வெறும் வரட்டு இருமல்.

'பார்க்காத வைத்தியர் கிடையாது. (என்னையும் சேர்த்துத்தான் சொன்னார்) செய்யாத சிகிச்சையும் கிடையாது. செத்தாப் பிறகுதான் நிற்கும்போலை' என மிகுந்த மனக் கவலையுடன் கூறினார்.

கேட்டபோது மனவேதனையாக இருந்தது. குற்ற உணர்வும் ஏற்பட்டது.அவரைச் சோதித்துப் பார்த்தபோது எந்த வித்தியாசமான குறிகளும் தெரியவில்லை. பழைய பரிசோதனை அறிக்கையிலும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மீண்டும் மிக நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு காதிற்குள்ளும் குடுமி அடைந்திருப்பது தெரிந்தது.

காதுக் குடுமி இயற்கையாக உற்பத்தியாவது. நோயல்ல. காதுக்குள் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவமே அடிப்படையானது. இது காதின் பாதுகாப்பிற்காகவே சுரக்கின்றது. வாயை மென்று உண்ணும்போது தசைகளில் ஏற்படும் அசைவுகள்மூலம் தானாகவே சிறிது சிறிதாக வெளியேறி விடுகின்றது. சிலருக்கு காதின் தோலிலிருந்து உதிரும் கலங்களும் ரோமங்களும் அதனுடன் சேர்ந்து இறுகிக் கட்டியாகி விடுவதுண்டு.

காதுக் குடுமி இயற்கையானது என்பதால் பொதுவாக எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை. முன் கூறியது போல இறுகிக் கட்டியாகி விட்டால் கூட பலருக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படுவதில்லை. காது கேட்பது மந்தமாக இருக்கலாம். சிலருக்கு மென்மையான வலி ஏற்படலாம். தலைக்கு முழுகும்போது அல்லது நீந்திய பின்னர் காது அடைப்பது போலிருப்பதுடன், வலியும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு காதிற்குள் இரைச்சல் ஏற்படக்கூடும். தலைச் சுற்றும் வரக்கூடும். வெகு அரிதாகவே நாட்பட்ட இருமல் காரணமாக காதுக் குடுமி இருப்பதுண்டு. அதனால் வைத்தியர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. அந்த முதியவருக்கு தொல்லை கொடுத்த நாட்பட்ட இருமலானது காதுக் குடுமியை அகற்ற நின்றுவிட்டது.

இதை வாசித்தவுடன் நாட்பட்ட இருமல் உள்ளவர்கள் காதுக் குடுமியை அகற்றுவதற்கான ஆயுதங்களைத் தேடி ஓடவேண்டாம். என்ன ஆயுதங்கள்? காது கிண்டி, நெருப்புக் குச்சி, சட்டைப்பின், கடதாசிச் சுருள், பஞ்சு முனைக் குச்சி (Ear Buds) இப்படி இன்னும் பல. இவற்றை நீங்கள் உபயோகிப்பது ஆபத்தானது. எடுக்க முயலும்போது குடுமி வழுகி உட்புறமாகத் தள்ளுப்பட்டு செவிப்பறையை சேதமாக்கலாம். இதனால் காது செவிடுபடவும் வாய்ப்புண்டு. அல்லது கிண்டுவதால் உரசல் ஏற்பட்டு புண்படலாம். கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வடியலாம். இப்பொழுது காதில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பஞ்சு முனைக் குச்சிகள்தான் காரணம் எனக் காது வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்திருந்து அவற்றை உபயோகிப்பதைத் தவிருங்கள்.

காதுக்குடுமி இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுங்கள். அது கரைந்து வெளியேறுவதற்கான துளி மருந்துகளை அவர் தரக்கூடும். அது தானே கரைந்து வெளியேறும் இல்லையேல் வைத்தியர் காதைக் கழுவி அகற்றுவார். சிலருக்கு கருவிகள் மூலமும் அகற்றக்கூடும்.

காதுக் குடுமியை அகற்ற வேண்டுமா? வேண்டாமா? அகற்றுவது அவசியமாயின் எந்த முறையில் அகற்றுவது என்பன பற்றி வைத்திய ஆலோசனைப்படியே நடவுங்கள்.

No comments: